“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!”
– பாவேந்தர் பாரதிதாசன்

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்..!”
– மகாகவி பாரதியார்

“தமிழா..! தமிழ் படி..!” இணையதளத்திற்குத் தமிழுணர்வு ததும்பி வழிய வந்துள்ள எமது தமிழ்ச் சொந்தங்களை www.activetamil.com மகிழ்வுடன் வரவேற்கிறது.

 

“தமிழா..! தமிழ் படி..!”  இணையதளத்தில் இணைந்து உள்ளூர்க் குழந்தைகளுக்கும், உலகக் குழந்தைகளுக்கும் புதிய அணுகுமுறையில் தமிழ் மொழியைக் கற்பிக்கவும்,  தமிழ் மொழியைக் காக்கவும் விழைகின்ற தமிழ்ப் பேருணர்ச்சியுள்ள அனைவரையும் www.activetamil.com அன்போடு அழைக்கிறது.

“தமிழா..! தமிழ்படி..!” இணையதளம் ஏன்?

நூறு ஆண்டுகளுக்கு முன், உலகில் ஏறத்தாழ 7,000 மொழிகள் பேசப்பட்டதாகவும், அவற்றுள் பாதிக்கு மேலான மொழிகள் பேசுவோர் இல்லாமல் அழிந்து போனதாகவும், இன்று உலகில் 3,000 மொழிகள் மட்டுமே பேசப்படுவதாகவும் மொழியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், அம்மொழியறிஞர்கள் ஒவ்வோர் இரண்டு வாரங்களில் (15 நாட்களில்) உலகின் ஓரு மொழியானது பேசுவதற்கு ஆளில்லாமல் அழிந்து வருகிறது என்றும், விரைவில் அழியும் அபாயத்திலுள்ள மொழிகளுள் தமிழ் மொழியும் உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.

 

உலகின் தொன்மையான மொழி என்னும் பெருமையும் புகழும் மிக்க தமிழை அழியும் அபாயத்திலிருந்து பாதுகாக்கவும், பாதுகாத்த தமிழைப் பத்திரப்படுத்தி அதன் நேர்த்தியும் இனிமையும் குலையாமல் உள்ளூர்ப் பள்ளிகளிலும் உலக நாட்டுப் பள்ளிகளிலும் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கவும், ‘தமிழா..! தமிழ் படி..!’ என்னும் இந்தத் தனி இணையதளம், உலகத் தாய்மொழி நாளினைச் சிறப்பித்துக் கொண்டாடும் வகையில், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள் தொடங்கப்பெற்றது.

‘தமிழா..! தமிழ் படி..!’ இணையதளத்தின் பயன்கள் என்னென்ன?

தமிழ்நாட்டிலுள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் குழந்தைகள்:

  • தமிழில் எளிய சொற்களையும், தொடர்களையும், பத்திகளையும் பிழையின்றி வாய்விட்டு வாசித்துக் காட்டுவர்.
  • எளிய சிறிய சொற்றொடர்களால் அமைந்த உரைநடைகளைப் பொருளுணர்ந்து வாய்விட்டு வாசித்துக் காட்டுவர்.
  • சிறிய கவிதைப் பாட்டுகளை மகிழ்ந்து பாடியும், வாசித்தும் காட்டுவர். தம் மனத்தில் தோன்றும் எண்ணங்களைச் சிறு சிறு தொடர்களாகவும், பத்திகளாகவும் எழுதிக் காட்டுவர்.
  • தமது சுற்றுச் சூழலில் அவர்கள் காணும் பொருட்கள், நிகழ்வுகள் குறித்து எளிய நடையில் விவரித்துப் பேசுவர்.
  • தமிழ் நாளிதழ்கள், சிறுவர் மலர்கள் போன்றவற்றில் வரும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றைப் படித்து உடன் பயிலும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வர்.